செவ்வாய், 22 டிசம்பர், 2009

அன்புள்ள பிரதமருக்கு

அன்புள்ள பிரதமருக்கு

அன்புடன் எழுதிக்கொண்டது..
நலம் நலமறிய பேராவல்...
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

தாங்கள் அமெரிக்கா சென்ற போது
அங்கே கூறினீர்கள்..
வெளி நாடு வாழ் இந்தியர்கள்
அனைவரும் இந்தியா திரும்ப வேண்டும்.
இன்னும் சொன்னீர்கள்
அறிவுசார்ந்த இந்தியர்கள் இந்தியா வரவேண்டும்.
நீங்கள் வெளிநாடு சென்றதால் இந்தியாவில் பின்னடைவு ஏற்பட்டது ..
இன்னும் சொன்னீர்கள்
உங்களுக்கு இதேபோல பதவிகள் இந்தியாவில் கிடைக்கும் என..
நன்றி .. மன்மோகன் ஜி.. நன்றி..



நாங்கள் அறியாமை காலம் முதல்
இன்று வரை வெளிநாடுகளில் வாழ்ந்து
பழக்கப்பட்டு விட்டோம்.
காலையில் எழுந்து மஸ்கா சிலைஸ் தின்றே எங்களுக்கு பழக்கமாகி விட்டது.
இன்னும் நாங்கள் ஊரில் இருந்தால்
எங்கள் குடும்பங்களில் பிரச்சனையே இருக்காது...??!!
சரி அது போகட்டும்..
நீங்கள் சொன்னீர்கள்
அறிவு சார்ந்த இந்தியர்கள் வரவேண்டும் என...

முதல் பயணம் வந்து ஊர் திரும்பும் போது நிச்சயமும்,
இரண்டாவது பயணத்தில் திருமணத்தை முடித்தும்,
மூன்றாவது பயணத்தில் குழந்தையை பள்ளியில் சேர்த்தோம்,
நான்காவது பயணம் போகும் போது சொன்னார்கள்
பிள்ளை பெரிய மனுசியாகி விட்டாள்...
பின்னர் மாப்பிள்ளை பார்த்து
பண்டிகைக்கு கைலியும் சட்டையும் எடுத்து கொடுத்து..
அப்படியே வழக்கமாகி
வெளி நாடுகளிலேயே வாழ்க்கையை தொலைத்த
எங்களை போன்றவர்களை என்ன செய்ய சொல்றீங்க?

எங்களுக்கு உட்வர்ட்ஸ் வாங்குவதற்கு முன்னால்
கடவுசீட்டு தான் எடுத்து தந்தார்கள்.


அறிவுசார்ந்த மக்களுக்கு மட்டும் அதேபோல பதவியா?
அப்போ எங்க குஞ்சாலிக்கும்,
மூஸா காக்கவுக்கும் ஒரு கப்டீரியா(tea stall) கிடையாதா?



சரி அறிவு சார்ந்த மக்களை கூப்பிடுறீங்க
நாங்களும் சென்னை அல்லது புனே,
அல்லது பெங்களூரு, அல்லது மாதப்பூருக்கு பெட்டிக்கட்ட தயார்.
அதற்கு முன் எங்களுக்கு சில வேண்டுவன இருக்கே..
* லஞ்சம் இல்லாத இந்தியா
* ஜாதி சண்டைகள் இல்லாத இந்தியா
* கூலிப்படைகளின் அச்சுறுத்தல்
* அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள்
* மின்வெட்டு இல்லாத தமிழகம்
என இப்படியே பட்டியல் எங்களிடம் இருக்கு..
இருந்தாலும் நல்ல இந்தியர்களாக
எங்களை இனம் கண்டு
நேர்மையான அரசியல் செய்யவும்,
நல்ல நிர்வாகம் செய்யவும்,
பரந்து விரிந்த இந்த பாரத பூமியிலே,
நீங்கள் விரும்பியவாறு தொழில் செய்யுங்கள்
உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும்
எமது அரசாங்கம் செய்யும் என,
நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து
நல்ல தொழில்கள் தொடங்கி,
நிம்மதியாக உற்றர் உறவினர்களோடு,
மனைவி குழந்தைகளோடு,
நிம்மதியாக தாய்பூமியில் வாழுங்கள் என,
அக்கரையில் எங்களை பார்த்து
அக்கறையுடன் அழைத்த
முதல் இந்திய பிரதமரே,
உமது பாசத்திற்கும், அன்பிற்கும்,
புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் சார்பாக 'சல்யூட்'.
என்றும் அன்புடன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக